இந்தியாவின் ஆதித்தழிழன் நாட்டார் கலைகள் யாழ்ப்பாணத்தில் மாணவர்களிற்கு கற்பிக்கப்பட்டது என்பது அதிஸ்டவசமான ஒன்று.அம்மாணவர்களுள் நானும் ஒருவர் என கூறும்போது மகிழ்வுடன் பெருமையும் அடைகிறேன்.
கற்றதென்னவோ ஐந்து நாட்கள் தான்.ஆனால் மனதைவிட்டு நீங்காத நாட்கள் அவை. “ஐந்து நாட்களில் எம்மால் மேடையேற முடியுமா?” என நாம் சந்தேகத்தில் இருக்கும் போது கூட “முடியும்”என்ற நம்பிக்கையுடன் பழக்கியவர் எமது குரு “வேணு” எனும் வேணுகோபால்.
எனக்கு அவர் அறிமுகமானது சுவாரஸ்யமான அனுபவம்.
நான் உள்ளகப் பயிற்சிக்காக இந்தியா சென்றிருந்த வேளை யாழ்ப்பாண மாணவர்களிற்கான “புத்தாக்கப்பயிற்சி” ஒன்றை ஒழுங்கமைத்திருந்தனர்.அதன் முதல்நாள் வைபவம் இனிய நாட்டார் பாடலுடன் ஆரம்பமானது.
“ஆத்தா உன் சேலை..அந்த ஆகாயத்த போல……………” என்ற பாடல் இசைக்கப்பட்டது. குpராமியப் பாடலுக்கேற்ற குரலில் பாடி அனைவரையும் கண்மூடி இரசிக்க வைத்தவர் என் குரு..
அன்றிலிருந்து இன்றுவரை அப்பாடலை பல மாணவர்கள் பாடிக்கொண்டிருப்பதை காணக்கூடியதாக உள்ளது.யார் பாடியாலும் அது வேணுவின் குரலுக்கு ஈடாகவில்லை என்பது உண்மைதான்.
சென்னைப் பல்கலைக்கழகத்தின் “முற்றம் கலைக்குழு”விற்கு தலைவராக விளங்கும் குரு வேணு அவர்களின் ஆடற்கலையை விபரிக்க வார்த்தை இல்லை..பார்ப்போரை வியக்கவைக்கும் அளவிற்கு இருக்கும்..
இந்தியாவில் நான் நின்ற தருணங்களை இப்போது நினைத்துப் பார்த்தால் நினைவிற்கு வரும் முக்கிய விடயங்களுள் ஒன்று “முற்றம் கலைக்குழு”..
அவர்களது ஒயிலாட்டம்,தப்பாட்டம்,சாட்டைக்குச்சியாட்டம் என ஒவ்வொரு வகையான ஆட்டத்தைப் பார்த்தும் அதிசயித்தேன்.நானும் இக்கலையை கற்கவேண்டும் என நினைத்தேன்.நான் இந்தியாவில் நிற்க்கும் வரை அதற்கான சந்தர்ப்பம் கிடைக்கவேயில்லை..
காலம் செய்த கோலம்.நான் யாழ்ப்பாணம் வந்து இரு மாதங்களுள் அக்கலையை கற்ப்பதற்கான வாய்ப்புக் கிட்டியது.யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகவளங்கள் மற்றும் பயிற்சி நிலைய இயக்குனர் கூறினார் “வேணு இங்கு வருவதாகவும் நாட்டார் கலைகளை கற்க்க விரும்புவர்கள் கற்றுக்கொள்ளுங்கள்”.மிகவும் மகிழ்ந்தேன்.
பின்னர் ஒரு நாள் காலை விரிவுரைகளிற்காக வகுப்பில் இருந்த நேரம் வகுப்பிற்கு வேணு வந்தார்.அனைவர் முகத்திலும் மகிழ்ச்சி தெரிந்தது.அன்று மாலையே நடனக்கலை கற்பிக்க ஆயத்தமானார்.
அன்றிலிருந்து காலையில் 6.30 மணி முதல் 9.30 வரை மாலையில் 4.00 முதல் 6.00 வரையிலும் எமக்கான கலைகளை கற்றுத்தந்தார்.அவரிடம் கற்ற காலம்,சம்பவங்கள் மறக்க முடியாதவை.
கற்பிக்கும் போது குருவாகவும் மற்றைய நேரங்களில் சக மாணவ நண்பனாகவும் அவர் செயற்பட்டவிதம் அனைவரையும் கவர்ந்தது.
எண்ணி ஐந்து நாட்களில் கலையை கற்றுத்தந்த பெருமை வேணு அவர்களையே சேரும்.இடையிடையே பல குறும்புகள்,அரட்டைகள் என போனது அந்த ஐந்து நாட்களும்.
நாம் மேடையேறும் நாளும் வந்தது.அனைவரும் ஒரே மாதிரியான ஆடைகள் தைத்துக்கொண்டோம்.ஊடக மாணவர்களாகிய நாம் சாட்டைக்குச்சியாட்டம்,ஒயிலாட்டம்,ஆதிவாசி நடனம் போன்றவற்றை கற்றுக் கொண்டோம்.
அவர் கற்றுத்தந்த கலைகளுள் என் மனதைக் கவர்ந்தது சாட்டைக் குச்சியாட்டம்.
ஒரு ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் மேடையேற்றப்பட்டது.அரங்கம் நிறைந்த மக்கள்.வேணுவி;;ன் தப்பின் ஓசைக்கு ஆடாத இளைஞர்கள் இருந்திருக்கமாட்டார்கள்.
தனக்குள்ளே சட்டத்தரணி,ஊடக மாணவன்,கலைஞன் என பல பதவிகளை வகித்தாலும் எள்ளளவேனும் பெருமை கொள்ளாத எளிமையை நாம் அவரிடமிருந்து கற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.
கைலாசபதி அரங்கை விட கோப்பாய் ஆசிரியர் கலாசாலை,கோப்பாய் கல்வியியற் கல்லூரி என தான் இலங்கையில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் நின்ற போதே 3 இடங்களில் மேடையேற்றிவிட்டுத்தான் சென்றார்.
ஓவ்வொரு அரங்கிலும் கிடைத்த விமர்சனங்கள்,கருத்துக்கள் எம்மை மகிழ்வித்தன.எமக்கும் இக்கலையை கற்றுத்தந்தமைக்கு எப்படி நன்றி கூறுவது??
இருப்பினும் நன்றிகள் பலகோடி…


0 comments:
Post a Comment